மதம் மாறினாரா சமந்தா ?? நாகசைதன்யா பதில்

                  சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடிகளின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. தங்களின் காதலை வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்து வந்த ஜோடி சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்தனர். திருமண தேதி தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் வேறு சிக்கல்களும் பேசப்பட்டு வருகிறதாம். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் சமந்தா. நாக சைதன்யா இந்து. திருமணத்தை இருமத முறைப்படியும் நடத்த முதலில் பேச்சு நடத்தப் பட்டது. அதன்படி சென்னையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடத்திய பிறகு இந்து முறைப்படி ஆந்திராவில் திருமணம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில் சமந்தா தொடர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கவர்ச்சி காட்சிகளில் நடிக்கக்கூடாது என்றும் நாக சைதன்யா குடும்பத்தினர் தடைவிதித்ததாக கூறப்பட்டது. இதில் கோபம் அடைந்த சமந்தா திருமணம்பற்றி முடிவு சொல்லாமல் மவுனம் காத்து வந்தார். ஒருவழியாக இப்பிரச்னையை நாக சைதன்யா சார்பில் நாகார்ஜூனா மனைவியும் நடிகையுமான அமலா, சமந்தாவிடம் பேசி தீர்த்து வைத்தார். இந்நிலையில் சமந்தா இந்து மதத்துக்கு மாறிவிட்டதாகவும் அதற்காக நாக சைதன்யா குடும்பத்தினர் நடத்திய பூஜையில் கலந்துகொண்டதாகவும் கூறப்பட்டது. சமந்தா பூஜையில் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகின. இதுபற்றி இருதரப்பிலும் மவுனம் காத்து வந்தனர்.

தற்போது இதுகுறித்து நாக சைதன்யா பதில் அளித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’ சமந்தாவை காதலிக்கும் விஷயம் நீண்ட நாட்களுக்கு முன்பே எனது உறவினரும், நடிகருமான ராணாவுக்கு தெரியும். அவரிடம் காதல் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்வேன். திருமணத்துக்கு பிறகு சமந்தா நடிப்பை தொடர்வது பற்றி எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. நடிப்பது அல்லது நடிப்பிலிருந்து விலகுவது எந்த முடிவாக இருந்தாலும் அதை சமந்தா முடிவுக்கே விடப்பட்டது. சில தினங்களுக்கு முன் சமந்தா மதம் மாறிவிட்டதாக புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் அன்னபூர்னா ஸ்டுடியோவில் வழக்கமாக நடக்கும் பூஜை ஒன்றில் அவர் கலந்துகொண்டார்’ என்றார். 

No comments