ஹீரோக்களுக்கு வலை வீசும் அஞ்சலி

கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் படங்களில் கண்டிப்பான பெண்ணாகவும், யதார்த்த வேடங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார் அஞ்சலி. கவர்ச்சிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று இயக்குனர்கள் எண்ணிய நிலையில் சுந்தர்.சி. இயக்கிய கலகலப்பு படத்தில் கவர்ச்சியில் கலக்கினார். இனி ஒரு ரவுண்டு வருவார் என்று எண்ணிய நிலையில் திடீரென்று குடும்ப மற்றும் சினிமா வாழ்வில் புயல் வீசியது. தனது சித்தி பாரதிதேவியுடனும், நட்புடன் பழகிவந்த இயக்குனர் களஞ்சியத்திடமும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் புகார், கோர்ட் வழக்கு, சங்க பஞ்சாயத்து என பல சர்ச்சைகளுக்குள் சிக்கினார்.


பிரச்னைகள் தலை தூக்கியதையடுத்து தமிழுக்கு முழுக்குபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்ற அஞ்சலி, ஆந்திராவிலேயே வீடு பார்த்து தங்கினார். ஒரு சில படங்கள் அவருக்கு கைகொடுத்தபோதிலும் பெரிய அளவில் வெற்றியை ஈட்ட முடிய வில்லை. அங்கும் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வந்தார். ஆரம்பத்திலிருந்த வேகம் இல்லாவிட்டாலும் அவரது நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக அவர் நடிப்பில் ‘இறைவி’ திரைக்கு வந்தது. அது அவருக்கு கைகொடுக்க வில்லை. 

யார் நீ, தரமணி, காண்பதுபொய், பேரன்பு, பலூன் உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார். தவிர விஷாலுடன் நடித்துள்ள மத கஜ ராஜா திரைக்கு வருவது தாமதமாகி வருகிறது. டாப் ஹீரோக்களுடன் படங்கள் வரவில்லையே என்ற ஏக்கம் அஞ்சலி மனதை உறுத்தி கொண்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தற்போது சத்தமில்லாமல் செய்து வருகிறார். 

டாப் ஹீரோக்களுக்கு அவர் தூது விட்டு வருகிறார். இந்நிலையில் சித்தியுடன் நிலுவையில் இருக்கும் குடும்ப பிரச்னை தனது திரையுலக பயணத்தை மீண்டும் பாதிக்கக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறார். இதையடுத்து சித்தியுடன் சமரசமாக செல்லும் வகையில் சமீபத்தில் அவரை நேரில் சந்தித்து பேசினாராம். அவரும் நடந்த பஞ்சாயத்துக்களை மறந்து அஞ்சலியிடம் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது.

No comments